காதல் நம்பிக்கை கிடையாது:கானா பாலா

மாருதி, மிருதுளா நடிக்கும் படம் மறுமுனை. மாரிஸ் குமார் இயக்கி உள்ளார். பி.எல்.பாலு, பி.எல்.சுப்பு தயாரிப்பு. சத்யதேவ் இசை. இப்படத்தில் திருவிளையாடல் தருமிபோல் பாடகர் கானா பாலா கெஞ்சிய சம்பவம் நடந்தது. இதுபற்றி பாலா கூறும்போது,பல படங்களில் பாடி வருகிறேன். மறுமுனை பட இயக்குனர் என்னை அழைத்து காதல் தோல்வி அடைந்தவன் குடித்துவிட்டு பாடுவதுபோல் ஒரு பாடல் வேண்டும். நீங்களே எழுதி பாடுங்கள் என்றார். எனக்கு காதல் மேல் நம்பிக்கை கிடையாது. அதனால் காதல் தோல்வி பற்றி தெரியாது. அதேபோல் குடிபற்றியும் தெரியாது. நான் டாஸ்மாக் பக்கம் எட்டிக்கூட பார்த்ததில்லை. டைரக்டர் வற்புறுத்தியதால் ஒப்புக்கொண்டேன்.

குடிகாரர்கள் சிலரிடமும், காதல் தோல்வி அடைந்தவர்களையும் தேடிப்பிடித்து அவர்களின் அனுபவத்தை கேட்டு பாடல் எழுதி பாடினேன். அத்தோடு முடிந்தது என்று பார்த்தால் அந்த பாடலுக்கு நடனம்ஆட வேண்டும் என்றார். தூக்கி வாரிப்போட்டது. எனக்கு நடனமே ஆடத் தெரியாது என்றேன். அப்படியும் விடவில்லை. அதற்கு தனியாக சம்பளம் தந்துவிடுகிறோம் என்றார். பிறகு நடன இயக்குனர் ராதிகாவை பயிற்சி தர அழைத்தார்.

எனக்கு முதலில் சம்பளம் தராதீர்கள். நான் நடனம் ஆடியபிறகு எவ்வளவு தப்பு செய்கிறேனோ அதற்கு ஏற்ப சம்பளத்தை குறைத்துக்கொள்ளுங்கள் என்றேன். மாஸ்டர் எனக்கு தந்த பயிற்சியால் நன்றாகவே ஆடினேன். சம்பளமும் கிடைத்தது.

Share |
Previous Page Next Page HOME