பொது இடத்தில் ஸ்ரேயாவிடம் அத்துமீறிய ரசிகர்கள்.

ஆந்திராவில் நடிகைகள் கடைதிறப்பு போன்ற பொதுநிகழ்ச்சிகளுக்கு வரும்போது ரசிகர்களின் அன்புத்தொல்லையாலும், சில சமயம் எல்லை மீறும் ரசிகர்களாலும், பிரச்சனை வருவது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இதுமட்டுமின்றி அவர்கள் வருகைதரும் இடத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஆந்திரபோலீஸார் திறப்புவிழா நடத்தும் நிறுவனங்களையும், அதில் கலந்துகொள்ள வரும் நடிகைகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்தில் அனுஷ்கா, ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரி என்ற ஊரில் ஜவுளிக்கடையை திறக்க வந்தபோது ஒரு ரசிகர் அத்துமீறி அனுஷ்காவிடம் நடந்துகொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோன்ற ஒரு சம்பவம் நேற்று விசாகப்பட்டினத்திலும் ஏற்பட்டுள்ளது. நடிகை ஸ்ரேயா விசாகப்பட்டினத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அவரது வருகையை அறிந்த ரசிகர்கள் பெருமளவில் சாலையில் கூடியதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சாலையின் இருபக்கங்களிலும், போக்குவரத்து ஸ்தம்பித்ததால் ஆத்திரமடைந்த போலீஸார் நிகழ்ச்சி நடத்துனரை அழைத்து இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் முன்னர் போலீஸிடம் அனுமதி வாங்கவேண்டும் என்றும், நடிகைகள் வருவதற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்துகொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை செய்தனர்.

ஸ்ரேயா இந்த நிகழ்ச்சிக்கு வந்தபோது கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்துகொண்டு அவரை பார்ப்பதற்கும், அவரிடம் கைகுலுக்குவதற்கும் ஆட்டோகிராப் வாங்குவதற்கும் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் லேசான தடியடி நடத்தி ரசிகர்கள் கூட்டத்தை கலைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

Share |
Previous Page Next Page HOME