இந்த ஆண்டில் அதிகம் சிரிக்க வைத்தவர்?

இருப்பதிலேயே கஷ்டமான விஷயம் ரசிகர்களை சிரிக்க வைப்பதுதான். தமிழ் சினிமாவில் அந்த வேலையைச் செய்வதற்கு காலம் காலமாக யாராவது ஒருவர் மொத்த வருடத்தையும் குத்தகைக்கு எடுத்துக் கொள்வது வாடிக்கை. நாகேஷிற்குப் பிறகு கவுண்டமணி - செந்தில், இவர்களுக்குப் பிறகு விவேக் என நீண்டகாலம் தாக்குப்பிடித்தவர்கள் வரிசையில் வடிவேலு காமெடியனாக நுழைந்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். சில வருடங்களாக தமிழ்சினிமாவில் தனிமனிதனாக காமெடியில் கோலோச்சிக் கொண்டிருந்த வடிவேலுவின் தற்காலிக இடைவெளியில் தன் திறமையை சரியாக நிரூபித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தார் சந்தானம்.

ஹீரோவுக்காக படங்கள் ஓடிய காலம் போய், சந்தானத்தின் காமெடிக்காகவே 2011, 2012 ஆம் ஆண்டுகளில் படங்கள் ஓடின. கடந்த வருடமும் சந்தானம் கிட்டத்தட்ட 15 படங்களில் நடித்திருக்கிறார். இதில் ‘சிங்கம் 2’, ‘ராஜா ராணி’, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ஆகிய மூன்று படங்கள் ‘டாப் 10 ஹிட்’ வரிசையில் இடம்பிடித்திருக்கிறது. இருந்தாலும் கடந்த மூன்று வருடங்களாக வீசிக் கொண்டிருந்த சந்தானத்தின் அலை 2013ல் கொஞ்சம் குறைந்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. வடிவேலு, விவேக், கருணாஸ், கஞ்சா கருப்பு போன்றவர்கள் இந்த வருடத்தில் கிட்டத்தட்ட ‘ஆளையே காணோமே’ என்கிற ரேஞ்சில் இருந்ததால் சந்தானத்தின் காமெடியையே பெரும்பாலான படங்களில் திரும்பத் திரும்ப பார்க்கும் நிலை ரசிகர்களுக்கு ஏற்பட்டது. இருந்தும் தன்னால் முடிந்த அளவு ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நகைச்சுவையைத் தர முயன்றார் சந்தானம்.

அவருக்கு சமமாக காமெடியில் கடந்த வருடம் கலக்கிய இன்னொருவர் நடிகர் சூரி. கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்திருக்கும் சூரி தனது இயல்பான காமெடியின் மூலம் ரசிகர்களை பெரிதும் குஷிப்படுத்தினார். இதில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘தேசிங்கு ராஜா’, ‘பாண்டிய நாடு’ ஆகிய படங்களில் இவரின் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.

படங்களின் எண்ணிக்கையைத் தவிர்த்துவிட்டு, ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பை முன்னிறுத்திப் பார்க்கும்போது, சூரி இந்த வருடம் கொஞ்சம் முன்னணியில் இருப்பது உண்மை. எனவே, இந்த வருடத்தின் ‘சிறந்த காமெடியன்’ பட்டத்தை சூரி தட்டிச் செல்கிறார்.

Share |
Previous Page Next Page HOME