இந்த படத்தின் கதையே ஒரு சுவர்தாங்க. வட சென்னை பகுதியைச் சேர்ந்த இரண்டு அரசியல் கட்சியைச் சேர்ந்த பெரிசுகள் தங்களுக்குள் பகுதி பிரிப்பதில் மோதிக்கொள்ள அதற்குள் காதல், காமெடியை இணைத்து கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
காளி அன்பு இருவரும் உயிருக்கு உயிரான நண்பர்கள். காளி ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். அன்புவோ அரசியல் ஆசையில் கட்சி ஒன்றில் சிறிய பொறுப்பில் இருக்கிறார். இவங்க ஏரியாவில் இருக்கும் சுவரில் அடுத்த ஏரியாவில் வசிக்கும் எதிர் கோஷ்டியைச் சேர்ந்த கண்ணன் அவரோட அப்பாவின் படத்தைப் போட்டு விளம்பரம் செய்கிறார். அடுத்த ஏரியாவில் இருந்து தங்கள் ஏரியா சுவரை சொந்தம் கொண்டாடும் கண்ணனின் கொட்டத்தை அடக்கத் துடிக்கும் அரசியல்வாதி மாரியின் உதவியுடன் அந்த சுவரைக் கைப்பற்றப் பார்க்கிறான் அன்பு. இதனால் இரு கோஸ்டிக்கும் பிரச்னை ஏற்பட கண்ணனின் மகன் கொலை செய்யப்படுகிறார். இதற்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக அன்புவை காளியின் கண் முன்னே கொலை செய்கின்றனர் எதிர் கோஸ்டியினர். தன் உயிர் நண்பனை பறி கொடுத்த காளி அதற்கு காரணமாக இருந்தவர்களை பழி வாங்கினானா? அன்புவின் லட்சியமான அந்த சுவரை கைப்பற்றினார்களா? என்பதுதான் மெட்ராஸ்
காளியாக கார்த்தி ஒரு வடசென்னை பையனாகவே மாறியிருக்கிறார். இதற்காக அவ கடுமையாக உழைத்திருப்பது நன்றாகவே தெரிகிறது.அவரது உடல் அசைவும், பேசும் பாஷையும் அவ்வளவு பொறுந்தியுள்ளது. கதாநாயகியாக கேத்தரின் தெரஸா. தெலுங்கில் கலக்கிய இந்த அழகு அம்மணி இப்போது தமிழில் நுழைந்திருக்கிறார். திரையில் வந்த சில நிமிடங்களிலேயே மனதில் ஒட்டிக்கொள்கிறார்.
காளியின் நண்பனாக வரும் அன்பு, அவரது மனைவி, எதிர் கோஷ்டி ஆளு போஸ்டர் நந்தகுமார், அவர் பையனாக வரும் மைம் கோபி உள்பட அனைவருடைய கேரக்டர்களுக் அவ்வளவு நேர்த்தி. அதிலும் அந்த ஜானி கேரக்டர் வந்தாலே திரையரங்கு கலை கட்டுகிறது. இசை சந்தோஷ் நாராயணன். பாடல்கள் எல்லாமே நன்றாக உள்ளது. அதிலும் காகித கப்பல்., காதல் கிறக்கம் என்றால் மற்றும் கானாபாலா எழுதி நடித்த பாடிய ஒப்பாரி பாடல் இறந்திடவா பாடல் எல்லோரின் மனதையும் உருகவைக்கும். பின்னனி இசையும் பாராட்டத்தக்கவகையிலேயே உள்ளது.
ஒளிப்பதிவு முரளி. வடசென்னை சம்பவங்களை க முன்னே கொண்டுவந்திருக்கிறார். படத்தின் விறுவிறுப்புக்கு பிரவினின் எடிட்டிங்கும் ஒரு காரணம்.
இயக்கம் பா.இரஞ்சித். முதல் படத்தை வெற்றிப்படமாக கொடுத்தவர்கள் இரண்டாம் படத்தில் சறுக்கியவர்களே அதிகம். ஆனால் இரஞ்சித் அதில் வென்றிருக்கிறார். முதல் படத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கியவர் இந்த படத்தில் சீரியஸான சப்ஜெக்ட்டை தொட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அதனை கொடுத்த விதத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார்.
நிச்சயம் கார்த்தியின் நம்பிக்கை வீண் போகவில்லை
![]()





