நடிப்பா? இசையா? குழப்பத்தில் ஜி.வி.பிரகாஷ்

பாலா படம் கைநழுவி போனதில் இருந்தே உஷாராகிவிட்டார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். ஆத்துல ஒரு காலும் சேத்துல ஒரு காலும் வச்சா, ஆறும் போச்சு, சேறும் போச்சு என்றாகிவிடும் என்பதை இந்த ஒரு சம்பவத்திலேயே உணர்ந்துவிட்டார் அவர். பென்சில் படத்திற்கு பிறகு ஜி.வி.பிரகாஷிடம் கால்ஷீட் வாங்கிவிட வேண்டும் தவியாய் தவிக்கும் உதவி இயக்குனர்கள் சிலருக்கு தொடர்ந்து ஏமாற்றம்தான் நிலவுகிறது.

யாரிடமும் கதை கேட்பதற்காக திறக்கவில்லை அவரது கதவு. ‘மதயானை கூட்டம்’ என்றொரு படத்திற்கு பினாமியாக இருந்து எடுத்துக் கொடுத்ததோடு தயாரிப்பாளர் ஆசை போச்சு. இப்போது பென்சில் படம் ஹிட் ஆகிவிட்டாலொழிய இவரை அடுத்த படத்தில் ஹீரோவாக பார்க்க முடியாது போலிருக்கிறது. அதை தெளிவுபடுத்துகிற விதத்தில் தன்னை நாடி கதை சொல்ல வருகிறவர்களிடம் தெளிவாக பேசிவிடுகிறாராம் அவர்.

ஒரு ஹாபிக்காகதான் நடிக்க வந்தேன். இதையே தொழிலா வச்சுக்கிற ஆசை எனக்கு இல்லை. ஒருவேளை இது மேல ஆசை வந்து, இதையும் கன்ட்டினியூ பண்ணலாம்னு நினைச்சா நிச்சயம் கதை கேட்கிறேன். அப்போ வாங்க என்கிறாராம்.

அதற்குள் தமிழில் மேலும் பல ஹீரோக்கள் அறிமுகமாகி அதில் மூணு பேராவது ‘கல்லா’ கட்ட இறங்கிவிடுவார்களே பிரகாஷ்!

Share |
Previous Page Next Page HOME