இந்த பிரஸ்மீட்டில் பேசிய பிரசன்னா, ‘இவ்வளவு அற்புதமான தயாரிப்பாளர் கிடைக்கறது கஷ்டம். (ராதிகா சரத்குமாரும், மலையாள தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபனும்தான் புலிவால் தயாரிப்பாளர்கள்) இதை மாரிமுத்து எந்த காலத்திலும் மறக்கக் கூடாது என்றார் சற்றே அழுத்தமாக,. சப்பாகுரிஷ் படத்தில் ஒரு காட்சியில் பத்து பேர் தோன்றி நடித்திருந்தார்களாம். அதே காட்சியில் நடிக்க 300 ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகள் வேண்டும் என மாரிமுத்து கேட்டதாக மேடையிலேயே குற்றம் சாட்டினார் பிரசன்னா. இருந்தாலும், இந்த பிரஸ்மீட், ஏதோ ஒரு மணி நேர காமெடி படம் பார்த்த மாதிரி அப்படியொரு கலகலப்பாக நடந்து முடிந்தது.
பிரசிடென்ஸி என்கிற ஒரு வார்த்தையை சொல்ல தான் பட்ட பாட்டை மேடையில் புரோட்டா சூரி விவரிக்க விவரிக்க, நாற்பது பரோட்டாவை ஒரே நேரத்தில் இறக்கினாலும் நொடியில் செரித்துவிடுகிற அளவுக்கு சிரித்து புண்ணாகிப் போனார்கள் நிருபர்கள். வழக்கமாக மேடையில் ஒரு வார்த்தைக்கு மேல் பேசி பழக்கமில்லாத விமல் கூட நிறைய பேசினார். தயாரிப்பாளர் லிஸ்டின் சிரித்துக் கொண்டே பேசினாலும், அவர் கேட்ட சில கேள்விகளை எல்லா தயாரிப்பாளர்களும் கேட்டால், நடிகர்களின் பர்ஸ்… புஸ்தான்!
ஒரு படம் ஹிட்டாச்சுன்னா அந்த படத்தில் நடிச்ச ஹீரோ, ஹீரோயின், காமெடியன்கள் எல்லாம் சம்பளத்தை ஏத்திடுறாங்க. நாங்களே திரும்ப நடிக்க கூப்பிட்டா கூட இப்ப பழைய சம்பளம் கிடையாதுன்னு பல மடங்கு ஏத்தி கேட்கிறாங்க. ஆனால் படம் ஹிட்டாச்சுன்னா அதனால் தயாரிப்பாளர் தன் அடுத்த படத்தின் ரேட்டை ஏத்த முடியல. பழைய சம்பளத்தை வாங்கிக் கொண்டு நடிகர்கள் நடிக்கணும். இதுக்கு இங்கேயே ஒரு முடிவு சொல்லுங்க என்று விமல், பிரசன்னா, சூரி ஆகியோரிடம் கேட்க, ஓடிவந்து மைக்கை பிடித்தார் சூரி. நான் அடுத்த படத்துல ஃபிரியாகவே நடிக்கிறேன். வசூல்ல ரெண்டு சூட்கேசை மட்டும் வீட்டுக்கு அனுப்பிடுங்க என்று சொல்ல, குபீர் ஆனது ஏரியா.
விமல் வாய்ஸ்சில் பிரசன்னா மிமிக்ரி பண்ணியதும், விமல் செய்த உதவியை மைக்கில் சொல்லி, ‘தயவு செய்து இதை எழுதுங்க’ என்று பிரஸ்சிடம் கேட்டுக் கொண்டதும் அவரது தனிப்பட்ட நற்குணத்தையும் சக நடிகரிடம் பழகுகிற அன்பையும் எடுத்துக் காட்டியது. வேறான்றுமில்லை. ஜன்னல் ஓரம் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதும், தன் சொந்த பணம் 85 லட்சத்தை கொடுத்து அந்த படம் வெளிவர உதவியிருக்கிறார். நானாக இருந்திருந்தால் நிச்சயம் செஞ்சிருக்க மாட்டேன் என்று பிரசன்னா குறிப்பிட அதற்கும் எவ்வித ரீயாக்ஷனும் காட்டாமல் அமைதியாக இருந்தார் விமல்.
துளியூண்டு தானம் கொடுத்துவிட்டு ஊரெல்லாம் டமாரம் அடிக்கும் தையல் மிஷின் ஹீரோக்கள் (ஜீவா மாதிரி நடிகர்கள்தான், வேற யாரு?) விமலை பார்த்தாவது அடக்கம் காட்டுங்கப்பா…!
![]()



